என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சினிமா நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் தனது வீட்டில் இருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை வீட்டில் உதவியாளராக இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் திருடிச்சென்றதாகப் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும், தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், மேலும் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சுபாஷ் சந்திரபோஸ், 'புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நான் டிப்ளோமா படித்து விட்டு சினிமா ஆசையில் சென்னை வந்தேன். சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். மேலும் பிரபல தயாரிப்பாளான கேஜி ராஜேஷ் என்பவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தேன். தயாரிப்பாளர் ராஜேஷ் பார்வதி நாயரை வைத்து ரூபம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதால், பார்வதி நாயர் - ராஜேஷ் இடையே நட்புறவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சனி மற்றும் ஞாயிறுகளில் பார்வதி நாயர் வீட்டிற்கு உதவியாக இருக்கச்சொல்லி ராஜேஷ் தன்னை அனுப்புவார்.
மேலும் அங்கு அவருக்குத்தேவையான உதவிகளை செய்து தருவேன். கடந்த இரண்டு மாதங்களாக பார்வதி நாயர் வீட்டில் இருந்தேன்’ எனத் தெரிவித்தார்.
பின்னர் அங்கு அவரை வேவு பார்க்கவே தன்னை தயாரிப்பாளர் ராஜேஷ் அனுப்பியதாக தெரிவிக்கும் சுபாஷ், அங்கு இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் வீட்டிற்கு ஆண் நண்பர்கள் சிலர் வருவதைத் தான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறி தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்கள் தன்னால் பணிபுரிய முடியாது என்று தெரிவித்ததால் கோபமடைந்த அவர் மறுநாளே, காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இப்புகார் தொடர்பாக பயந்துகொண்டு, 7 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை பார்வதி நாயர் வீட்டிற்குச் சென்று பணிபுரிந்து வந்தேன் எனவும், கடைசியாக பார்வதி நாயர் அளித்தது பொய்ப் புகார் என்று தெரிந்ததும் போலீசார் தன்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.