சென்னை:திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (22-10-2020), தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக தலைமையேற்று தொடங்கிவைத்து பேசினார்.
அதில், "இந்த நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கெனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
இன்றைய தினம், வேலை இருக்கிறது, வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாக ஆகிவிட்டது. அனைவரும் படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.