தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் IIT/JEE போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக இன்று (டிச. 15) டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் M/s.Nextgen Vidhya Pvt. Ltd., நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு முதன்மைச் செயலாளர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியரை தொழில்நுட்பக் கல்வி சார்ந்த IIT/JEE உயர்கல்விக்கான போட்டி தேர்விற்கு தயார்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
இப்பயிற்சி கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் வழங்கப்படும், மேலும் இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.