சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர், இணைச் செயலாளர் லெனின், ஜீவன், பொருளாளர் பிரபா ஆகியோர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்துள்ளனர் . அந்த மனுவில், தலைமைச் செயலகப் பணியில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர், முதுநிலைத் தட்டச்சர் மற்றும் முதுநிலை நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுவதற்கான அறுதியிட்ட நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் தேதி என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தப் பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பதவி மூப்பிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியலுக்கான எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நெடுங்காலமாகப் பணிமூப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வெளிவராமல் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தலைமைச் செயலகப் பணியில் சேர்ந்த உதவியாளர்கள், தட்டச்சர்கள், நேர்முக எழுத்தர் ஆகியோருக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதன் காரணத்தால், முழுத் தகுதியினைப் பெற்றிருந்தும் ஏறத்தாழ பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் கடந்த பிறகும். காலிப் பணியிடங்கள் இருந்தும் பதவி உயர்வு வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பணிமூப்பு தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவை: சமூக நீதியினைக் காக்கும் வகையில், அரசாணையினை விரைவில் வெளியிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தேர்வாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிமூப்பு நிர்ணயம் செய்யப்படாமல் பதவி உயர்விற்காகக் காத்திருக்கும் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வினை உறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நேரடி மற்றும் அமைச்சுப் பணியிலிருந்து மாற்றுப் பணி மூலமாக பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.