சென்னை: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 348 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், தடுப்பு காவலின்போது 1,189 பேருக்கு சித்ரவதைகள் நடந்திருப்பதாகவும் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகளவிலான லாக்கப் மரணங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்குமார் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரையில் 157 லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மட்டும் 11 மரணங்கள் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின்சாரம் தாக்கி புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். அதுகுறித்த சர்ச்சை இன்றளவும் நீடித்துவருகிறது.
பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழப்பு
அதேபோல், சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது அனுமதித்த நேரத்தைவிட கூடுதலாக கடை திறந்ததாகக் கூறி பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய தந்தை, மகன் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது காவல் துறையினர் தாக்கியதில் சிறையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது.
சிடிவி கேமராக்கள்
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் நிலையங்கள், சிறைகள் ஆகிய இடங்களில் பல சீர்த்திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கொண்டுவந்தது. குறிப்பாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
லாக்கப் மரணங்கள்
இது ஒருபுறமிருக்க சிறைகளில் 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை மட்டுமே 22 கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. "பொதுமக்களை துன்பறுத்துவதற்கும், தாக்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை முதலில் காவல் துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை கையிலெடுப்பதால் மட்டுமே லாக்கப் மரணங்கள் நடக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.