சென்னை:மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் 2014ன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
களப்பணியாளர்கள் மூலம் இணையதள இணைப்புடன் கூடிய கைபேசி தரவு மூலம் (Mobile App Linked with Internet) தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் ஆகியவற்றை பெற்று பதிவு செய்யும் பணி தற்பொழுது கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். தெருவோர வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறவும் வழிவகை செய்யப்படும்.