தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2021, 8:09 AM IST

ETV Bharat / state

ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கிடந்த கேரள மாணவர் உடல்: காவல் துறை விசாரணை!

சென்னை ஐஐடி வளாகத்தில் கேரள மாணவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிந்த நிலையில் கிடந்த ஐஐடி மாணவர் உடல்
எரிந்த நிலையில் கிடந்த ஐஐடி மாணவர் உடல்

சென்னை: கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் ஐஐடி கல்லூரி, கரோனா காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஐஐடி விடுதியில் மட்டுமே மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 01) மாலை 6.15 மணிக்கு ஐஐடி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டுப் பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

கருகிய நிலையில் இருந்த ஆண் சடலம்:

அப்போது அங்கு எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கருகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை:

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், உயிரிழந்த நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் (22) என்பது தெரியவந்தது.

மேலும், கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியெட் படிப்பில் சேர்ந்தார்.

கொலையா? தற்கொலையா?

வேளச்சேரி லதா தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவந்த உன்னிகிருஷ்ணன் நேற்று (ஜூலை 01) காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, உன்னிகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா செய்துகொண்டாரா எனப் பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details