கோவை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கோவை வந்துள்ளார். கோவை விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், கோவை மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். எரிவாயு இணைப்பு இல்லாத ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாட்டில் 9 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் சுமார் 11 கோடியே 50 லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் கடந்த 15 மாதங்களாக நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை இலவசமாக பெற்று வருகின்றனர். புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பிணையில்லா கடன் வழங்கப்பட்டு பலர் தொழில் தொடங்கி முன்னேறி வருகிறது.
தெருவோரங்களில் கடை வைத்திருப்பவர்களும், வியாபாரிகளும் பிணை கொடுக்க முடியாத சூழலில் உள்ளவர்கள், இவர்களுக்காக பிரதம மந்திரி சுய நிதி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடும் வேளையில் இன்றும் தண்ணீர் இணைப்பு இல்லாத நகர மற்றும் ஊரக பகுதிகள் உள்ளது.