சென்னை: இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
மாணவர் சேர்க்கை தாமதம்:வழக்கமாக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்கும். ஆனால் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்காக காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்பும் நிலையில், இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர்.