சென்னை தியாகராய நகர் இல்லத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சசிகலாவைச் சந்தித்தனர். இதனையடுத்து சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒன்றாக இணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் வெற்றி கிடைக்கும். அதிமுகவின் பொதுச்செயலாளார் பதவியை யாரும் பறிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக - அதிமுக விவகாரங்களில் இரட்டை வேடம் போடுகிறது. ஏனெனில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் எழுந்து பேசுகையில் அருகில் இருந்தவர் (ஈபிஎஸ்), ஓபிஎஸ் பேசுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். மீண்டும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸை அனுமதித்தேன் எனத் தெரிவித்தார். ஏன் ஓபிஎஸ்ஸை அதிமுக உறுப்பினர் எனக் குறிப்பிடவில்லை. இதிலிருந்து திமுகவின் இரட்டை வேடம் நன்றாகத் தெரிகிறது.
ஆருத்ரா விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி முடிவடையும். நான் சாதி பார்ப்பதில்லை. அப்படி பார்த்து இருந்தால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரை எப்படி முதலமைச்சராக தேர்வு செய்திருப்பேன். அதிமுகவில் தலைவர்களைக் கடந்து தொண்டர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
உங்களுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் தனது தவறை உணர்ந்து கொண்டார். மேலும் அவரைப் போன்று சில தலைவர்கள் திருந்தி கொள்ளத் தயாராகி வருகின்றனர்” எனப் பதிலளித்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிவில் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் நிரந்தரமல்ல என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதற்கு மேல நான் என்ன சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவிர மற்றவர்கள் அதிமுகவில் இணையலாம் என்று ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “இது குறித்து எங்கள் கட்சியின் தொண்டர்களிடம் கேட்டால் தெரியும். காரணம், நான் எல்லோருக்கும் பொதுவான நபர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"இது தாங்க ரஃபேல் வாட்ச் பில்; ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன்" ஆதாரம் காட்டிய அண்ணாமலை!