கரோனாவைக கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்க கோரிக்கை
சென்னை : கரோனா பரவலை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் முழுமையான பொது முடக்கத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள மா.சுப்ரமணியன், புதிய அமைச்சர்களுக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்.
தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகள் சிகிச்சை பெறுவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான, ஆக்ஸிஜன், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆக்ஸிஜன், மருந்துகள் தட்டுப்பாட்டாலோ, சிகிச்சை பலனின்றியோ உயிரிழப்பு ஏற்பட்டால் உறவினர்கள் உணர்ச்சி வசப்பட்டு தனியார் மருத்துவர்கள் நிர்வாகத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ள அட்மிஷன் தேவையில்லாத நோயாளிகள், அட்மிஷன் கேட்டு தகராறு செய்கிறார்கள். இது போன்ற காரணங்களால் தனியார் மருத்துவமனைகள் உயிருக்குப் போராடும் தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு, சரியான நேரத்தில், சரியான சிகிச்சை வழங்க முடியவில்லை.
அதேசமயம் சில தனியார் மருத்துமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் படுக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு படுக்கைகள் அனுமதி மறுக்கப்படுகிறது. வசதி படைத்தோருக்கு படுக்கைகளை ஒதுக்கி லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலித்து அதீத லாபம் பார்க்கும் போக்கும் பல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இதனால் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.