சென்னை: மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட வேண்டும் எனவும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வினை எழுதி சில ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பதால் அனைவருக்கும் கலந்தாய்வு குறித்து பயிற்சி அளித்து, கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நடத்திட வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் வலியுறுத்தினார்.
மேலும் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு இதர அரசு மருத்துவர்களுக்கு இணையாக பயிற்சிக் கால ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஊதியத்தை உயர்த்திட வேண்டும்
தொடர்ந்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு அரசு டாக்டர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைவான ஊதியத்தை பெறுபவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவர்களாகவே உள்ளனர். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
மருத்துவர்கள் சிறப்பான சேவை
கரோனாவை கட்டுப்படுத்துவதிலும், கரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சிறப்பான சேவையை செய்துள்ளனர். தங்களது உயிரையும் துச்சமாக கருதி பணியாற்றியுள்ளனர். பலர் கரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். சேவை உள்ளத்தோடு பணிபுரியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தப்படுகிறதே ஒழிய அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி (சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி) பயிற்சி மருத்துவர்களுக்கு, இதர தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும் பயிற்சி மருத்துவர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்க ஊதியம் வழங்குவது போல் இவர்களுக்கும் வழங்க வேண்டும்.