கரோனா தொற்று இரண்டாவது அலையின்போது வடமாநிலங்களில் முதலில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கடந்த ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. தற்போது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் பலனாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையில் ஜூன் 21ஆம் தேதிவரையில் அரசு மருத்துவமனைகளில் 1,857 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 653 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்த சிசிக்கையை மேற்கொள்ளும் நபர்களிடம் தனியார் மருத்துவமனைகள் சிடி ஸ்கேன், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சைக்கு தானாக மருந்து எடுக்க கூடாது
கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர்நாராயணபாபுகூறும்போது, "கருப்பு பூஞ்சை கரோனா தொற்று பாதிப்புகள் வருவதற்கு முன்னரே வழங்கமாக இருக்கும் நோய்தான். மாதம் 5 முதல் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆண்டிற்கு 60 பேருக்கும் மேல் கண்டறியப்பட்டது.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்நோய் வருகிறது. மீண்டும் கரோனா தொற்று குறைந்துவருகிறது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா இரண்டாவது அலையில் 2,510 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதில், 110 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மற்றவர்களும் நலமுடன் இருக்கின்றனர். இந்த சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளது.
கரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து அதிகம் பயன்படுத்துபவர்களுக்குத்தான் வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் இந்நோய் வராமல் தடுக்கலாம். சர்க்கரை நோய்க்கு ஸ்டீராய்டை மருந்தை தானாக எடுத்துக்கொள்ளக்கூடாது.