தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்த கொடிய கரோனா நோய்த் தொற்றால் மார்ச் 17ஆம் தேதி முதல் இந்த நிமிடம் வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றோம். தனியார் பள்ளிகள் எண்ணற்ற இடர்பாடுகளை சந்தித்துவருகின்றன. பழைய, புதிய கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடியாததால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியவில்லை.
இதுபோன்று பல்வேறு சிக்கலில் தனியார் பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் பெறப்பட்ட யூ.டி.ஐ.எஸ் நம்பர் வைத்துக்கொண்டு தனியார் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களிடம் இருந்து டி.சி கூட வாங்காமல் ஆதார் அட்டையைப் பெற்று அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் பல தனியார் பள்ளிகள் இன்றைக்கு மூடும் நிலைக்கு வந்துள்ளன.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் , கல்வித்துறைச் செயலர் உடனடியாக தனியார் பள்ளிகளின் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியிலும் எந்த மாணவரையும் சேர்க்கக்கூடாது என்ற அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மேலும், கட்டாயம் அதை இந்தாண்டு முதல் அமல்படுத்த வேண்டும்.