சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' ஜெயலலிதாவைச் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளன. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி சொல்ல போய் இருந்தேன்.
என்னிடம் ஈழம், ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்னைக் குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்தார். நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வராமல், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து போராடி, வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார். இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை தந்தால் பாதுகாப்பாக இருக்கும். பணம் தருவது தற்காலிக இழப்பீடாகத் தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்புத் தர வேண்டும்.