சென்னை:நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காலமாகும். அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு இரவுகளில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 16ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இதைத் தொடர்ந்து, ஜனவரி 18, 19, ஆகிய தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதைத் தொடர்ந்து, 21-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.