நடந்துமுடிந்த வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவரின் வெற்றியை திமுக தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்
அதில், "பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக கழகத்தின் மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் இருந்தன.
தனியாக நடைபெற்ற இத்தேர்தலில் அதிமுக ஆட்சியாளர்களின் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரில் இறங்கி அதிகார அத்துமீறல் ஆட்டம் போட்டது. எதிர்க்கட்சியான திமுக தனது தொண்டர் பட்டாளத்தையும் தோழமைக்கட்சிகளின் பலத்தையும், பொதுமக்களின் பேராதரவையும் நம்பி களமிறங்கியது.
அயராத உழைப்பும் சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர் மக்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக் கழகத்தின் வெற்றிக்கோட்டையாக்கியிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை காலமெல்லாம் நம்மை வளர்த்தெடுத்து வழிகாட்டிய நம் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கணிக்கையாக்கி, ஜனநாயக வழிமுறையில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்கும் மகத்தான பணியில் தொடர்ந்து முன்னேறிச்செல்வோம்!
வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், தலைவணங்கி, நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்! " என்று தெரிவித்துள்ளார்