சென்னை:சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று (டிச.20) நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள், பகுதி, ஒன்றிய செயலாளர்கள் என ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் நடைபெற்ற கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
அப்போது பேசிய அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "நம்மை தாண்டி நமக்கு இருக்கும் இரண்டு பலம் அண்ணா, கலைஞர். நம்மால்தான் தமிழ்நாட்டை வெல்ல முடியும், சிறப்பான திட்டத்தை செயல்படுத்த முடியும். எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நாம்தான் வெற்றி பெறுவோம். ஆனால் அதை சாதாரணமாக வெற்றி அடைய விடமாட்டார்கள். மந்திரத்தால் மாங்காவை பழுக்க வைக்க முடியாது அதுபோல் நமது வெற்றி சாதாரணமாக கிடைக்காது.
அண்ணா மறைவுக்கு பிறகு 184 இடங்களில் கருணாநிதி வெற்றி பெற்றார். அந்த வெற்றி நமக்கு வேண்டும். 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற வேண்டும். அதுதான் முழுமையான வெற்றி. அதற்காக முழு முயற்சியில் உழைக்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மை சுற்றி இருப்பவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். இந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி நாம் ஐந்து முறை ஆட்சி செய்ததைவிட பெரிய வெற்றியாக இருக்கும். மத்திய பாஜக, அதிமுக அரசுகள் பண பலம் மற்றும் ஊடகம் மூலம் நம்மை மும்முறையில் தாக்குகின்றனர். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.