சென்னை:மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி (Measles and Rubella vaccination) செலுத்தும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில், ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், 9 மாதக் குழந்தை முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும், பள்ளிகளை பொறுத்தவரை நடமாடும் மருத்துவ குழு, வாகனங்களின் மூலம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களை பொறுத்தவரை, 9 மாதக் குழந்தைகள் தொடங்கி 15 வயது வரையிலான இளம் சிறார்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 42 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மழைக்கால நோய்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூடுதல் தவணை தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதற்காக ஒன்றிய அரசிடமிருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சத்து 90 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எடுத்துள்ளது. மழை பாதிப்பிற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மருத்துவத் துறை டிசம்பர் 6ஆம் தேதி 300 நடமாடும் மருத்துவ வாகனங்களை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது.