சென்னை:தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ல் சில விதிகளில் மாற்றங்கள் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் ஈட்டும் வகையில், மேம்பாலங்கள், சுவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பர பலகைகளை வைக்க அனுமதி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடமிருந்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் இந்த சட்டத்திருத்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அனுமதியால், நகரங்களின் அழகு கெட்டுவிடும் என்றும், விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(மே.4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், Tamil Nadu Urban Local Bodies Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 மற்றும் Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 விதிகளின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அதிமுக ஆட்சியிலேயே, 2018ஆம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களில் விளம்பரங்கள் செய்யும் ஏகபோக சூழல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.