சென்னை:ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் 'சுகாதார மாநாடு - 2022'யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'கல்வி, மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த முதல் மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடங்கி வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், சுப்புலட்சுமி மகளிர் உதவித்திட்டம் உள்ளிட்டப் பல திட்டங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் செயல்படாத திட்டங்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறேன்.