சென்னை மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா காலத்திலும் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கஞ்சா வியாபாரிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சென்னையில் அதிகமுறை கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்களை சேகரித்து, அதில் மிக முக்கிய கஞ்சா வியாபாரியான ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (எ)கஞ்சா ரமேஷ் என்பவரைக் காவல் துறையினர் பின்தொடர்ந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக கஞ்சா ரமேஷை பின்தொடர்ந்ததில், ஆந்திர மாநிலப் பகுதியில் கஞ்சாவை வாங்கி, காய்கறி ஏற்றி வரும் லாரியில் மறைத்து வைத்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளார். மேலும், காவல் துறைக்குச் சந்தேகம் வராமல் இருக்க ஆட்டோவில் மூன்று பெண்களுடன் கோயம்பேட்டிற்குச் சென்று காய்கறியுடன் கஞ்சாவை மறைத்துக் கொண்டு, எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், கஞ்சா ரமேஷ். கரோனா தொற்றின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றிய போதும்; அதேபோல் கஞ்சாவைக் கடத்தி வந்துள்ளார்.