TASMAC: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, "இந்த ஆண்டு முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நல்லாட்சிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. கரோனோ காலத்தில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து மக்களைக் காப்பாற்றிவரும் முதலமைச்சரை பாமக சார்பில் வரவேற்கிறேன்.
கரோனா மூன்றாவது அலையின் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு, மேலும் 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை போன்ற நல்ல முயற்சியினை பாமக சார்பில் வரவேற்கிறோம். அத்தோடு மட்டுமில்லாமல் கரோனா பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகளை மூடவும் பாமக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வு
போதைப்பொருள் விற்பனையை முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கரோனா கால நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டிருந்தார். தற்போது முதலமைச்சரும் வரும் 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று 110 விதியின்கீழ் அறிவித்துள்ளார்.