சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சொந்த ஊராக கொண்டவர், லெனின் ரெட்சகநாதன் (38). இவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின், சென்னை பணியக மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்தார். சுற்றுச்சூழல் குறித்த செய்திகளை மிகுந்த ஆர்வத்துடனும் சமூக அக்கறையுடனும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும் தலைமைச் செயலக செய்திகளையும் ஆர்வத்துடன் லெனின் பதிவு செய்துவந்தார்.
லெனின், முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், டிடி நெக்ஸ்ட், டெக்கான் கிரானிக்கல் ஆகிய ஆங்கில நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். துடிப்புடன் பணியாற்றி வந்த செய்தியாளர் லெனின், இன்று மாலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.