TN Assembly:சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதி வழங்கவில்லை என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு இரண்டு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பெண் காவலர் புகார் அளித்தும், வழக்குப் பதிய தாமதமானது ஏன்?
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. கஞ்சா அதிகளவு விற்பனையாகிறது. பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் அதிகம் விற்பனையாகிறது. ஆனால், அதனைப் பற்றி அவையில் பேச அனுமதிக்கவில்லை. தினந்தோறும் கஞ்சா பிடிபட்டதாக செய்தி வருகிறது. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.