சென்னை:சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை கைது செய்தார்.
இந்நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக்கூடாது என, தான் வற்புறுத்தியதாகவும், சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில், " கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னுடனும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.எனவே நான் எந்த குற்றமும் செய்யாததால் எனக்கு பிணை வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.