சென்னை:அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராமன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் இணைந்து நிலம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஜெயராமன் மற்றும் தேவராஜ் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ரூ.20 லட்சம் பணத்தை தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து தேவராஜ் பல முறை ஜெயராமனிடம் தனது பணத்தினை தரும்படி கேட்டு வந்து உள்ளார்.
ஆனால், ஜெயராமன் பணம் தராமல் கடந்த 3 ஆண்டுகளாக பணம் தராமல் போக்கு காட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், ஜெயராமன் நேற்று இரவு மயிலாப்பூரில் தொழில் சம்பந்தமாக சென்ற நிலையில் அங்கு வைத்து தனது கூட்டாளிகளான சிந்தாதிரிப்பேட்டை ஹேமநாதன், பொன்னேரியைச் சேர்ந்த திவாகர், பாலாஜி, அத்திப்பேட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், தினேஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து கத்தி முனையில், காரில் கடத்தி உள்ளார்.