கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1972ஆம் ஆண்டு பொங்கலூர் பழனிசாமி திருமணத்தையும், 1999ஆம் ஆண்டு பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கலைஞர் நடத்தி வைத்தார். கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்து இருப்பார்” என்றார்.
மேலும், கட்சியில் பொங்கலூர் பழனிசாமி மற்றும் மதியழகன் ஆகியோரின் கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு, தமிழ்த் திருமணமாக நடந்து இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967ஆம் ஆண்டிற்கு முன்பு சட்ட உரிமையில்லை எனத் தெரிவித்த அவர், அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 6ஆவது முறையாக நடைபெற்று வருகிறது; தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றவில்லை;70 விழுக்காடு நிறைவேற்றி இருக்கின்றோம்; மீதமுள்ள 30 விழுக்காட்டையும் விரைவில் நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் எனத் தெரிவித்த முதலமைச்சர், 4 நாள்களுக்கு முன்பு கோவை வந்தபோது மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர் எனவும்,
மனுக்களை கொடுக்கும்போது கூட மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர் என்றும்; இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் முதலமைச்சர் பூரிப்புடன் தெரிவித்தார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கு வந்தபோது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டோம் எனவும்; ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம் எனத் தெரிவித்த அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 70 விழுக்காடு நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார். இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம் எனவும் கூறினார்.
மேலும், 15 நாள்களுக்கு ஒரு முறை அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றேன் எனத் தெரிவித்த முதலமைச்சர்,
கடந்த முறை டெலிபோன் மூலம் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட ஒருவரிடம் பேசிய போது, 10 ஆண்டுகளாக நடக்காத வேலை 10 நாட்களில் முடிந்துவிட்டதாக பூரிப்போடு தெரிவித்ததாகக் கூறினார்.