சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் ஒரே நாளில் இன்று(நவ-5) தொடங்கப்பட்டது. அதில், சைதை தொகுதி வண்டிக்காரன் தெரு மேற்கு மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மா சுப்பிரமணியம் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 15-35 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பெய்த 10 சென்டி மீட்டர் மழையில் பெரிய பாதிப்பு இருந்தது.
முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி நகராட்சிதுறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். அதனால் 7 மாதங்களுக்கு உள்ளாகவே 90% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு 4 நாட்களாக முதலமைச்சர் அறிவுரைப்படி கட்டி முடிக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு வருகிறார்.