தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2022, 3:43 PM IST

ETV Bharat / state

நெருங்கும் பருவமழை - மழைநீர் கால்வாய் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழை நெருங்குவதால் மழைநீர் கால்வாய், சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஒப்பந்ததார்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Government
Government

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டுபிடித்து, அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறுபாலங்களுக்கு கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்கு கீழ் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் உள்ள கழிவுகளையும், மண் மேடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாய்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்வாய் இணைப்பு இல்லாத இடங்களில், இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய பணிகளை மழைக்காலத்துக்குப் பின்னர் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16 சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனை விட கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை பாலங்களில் இருந்து வெளியேற்றினால், அது மீண்டும் பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது. மழை வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

ABOUT THE AUTHOR

...view details