ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தாயை இழந்து காட்டுக்குள்ளிருந்து வழித்தவறி வந்த, மூன்று மாத பெண் யானைக் கன்றை வனத் துறையினர் மீட்டனர். அந்தக் கன்றை சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் சென்று ’அம்முக்குட்டி’ எனப் பெயரிட்டனர்.
அங்கு கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக் கன்றை பரிசோதித்தனர். மேலும் தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து கன்று பராமரிக்கப்பட்டுவந்தது.
இதையடுத்து, யானையை வனப்பகுதிக்குள் விடுவதற்குத் தடைகோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ”காட்டில் விடப்பட்டுள்ள யானைக் கன்றை, யானைக் கூட்டம் சேர்த்துக் கொள்ளும் என்பது நிச்சயமில்லை. மூன்று மாத கன்றால் சுயமாக உணவு உட்கொள்ள முடியாது. காட்டில் விடப்பட்டுள்ள யானைக் கன்றுக்கு பிற விலங்குகளால் ஆபத்து ஏற்படும். எனவே யானைகள் முகாமில் பராமரிக்கக்கோரி வனத் துறைக்குக் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது.