சென்னை: ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல் துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒரு கோடியே 62 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. தொடர்ந்து, அந்தப் பணத்திற்குண்டான ஆவணங்கள் இல்லாத நிலையில், காவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்தப் பணத்தை ஏ.டி.எம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக ராமமூர்த்தி, சுகந்தராஜ் ஆகியோர் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து சேப்பாக்கம் தேர்தல் அலுவலரிடம் காவல் துறையினர் புகார் அளித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை திருவல்லிக்கேணி கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.
அதே போல் கோட்டூர்புரம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் ஏழு லட்சத்து 21ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தனியார் ஏஜெண்ட் நிறுவனம் மின்சார அலுவலகத்திலிருந்து பணத்தை வசூல் செய்து வங்கியில் பணம் செலுத்த கொண்டு சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்திற்குண்டான ஆவணங்கள் சரியாக இருந்ததால் மீண்டும் அவர்களிடமே, பணம் ஒப்படைக்கப்பட்டது.