தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - பிப்.22 தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!

சென்னை: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

By

Published : Feb 17, 2021, 1:13 PM IST

DMK
DMK

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50-க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி – சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு இல்லத்தரசிகளுக்கு ஒரு 'அதிர்ச்சி'ப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பர் மாதத்தில், தலா 50 ரூபாய் வீதம், இரு முறை 100 ரூபாய் அதிகரிப்பு - பிப்ரவரி மாதத்தில் இரு முறை 75 ரூபாய் அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விலை உயர்வுகளால், காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம் போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்துக் கட்டணம் உயருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன.

தினமும் பெட்ரோல் - டீசல் விலை போட்டி போட்டுக் கொண்டு பந்தயக் குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில் - சமையல் எரிவாயு விலையோ தாவிக்குதித்துச் செல்கிறது.

எனவே, வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அதிமுக- பாஜக அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பாஜக அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில், கழக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details