இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தினசரி கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் 500-க்கும் குறைவாக இருந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 15,659 ஆக அதிகரித்திருக்கிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 180 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 25 நாள்களில் கரோனாவுக்கு மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை 25 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
கரோனா முதல் அலை உச்சக்கட்டத்தை எட்டியபோது, சிகிச்சைப் பெற்றுவந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 896 மட்டும்தான். இப்போது மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை அதைவிட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
கரோனா இரண்டாம் அலை தாக்கத் தொடங்கிய பிறகு 350 மருத்துவர்கள் மட்டுமே தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நிச்சயம் போதுமானதல்ல.
மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையான பணிச்சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஒரு மருத்துவர் ஓய்வே இல்லாமல் சிகிச்சை அளித்தால்கூட ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 14 பேருக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். ஒரு நோயாளியின் உடல்நிலையை ஆய்வு செய்து ஐந்து நிமிடத்திற்குள் மருத்துவம் அளிக்க வாய்ப்பே இல்லை.
ஓய்வு இல்லாமல் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றும்போது நோயாளிகளுக்குத் தரமாக மருத்துவம் அளிக்க முடியாது. கரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்கள் இரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால், ஒரு வாரம் தனிமைப்படுத்தி ஓய்வளிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
இந்த நிலையைப் போக்க அதிக எண்ணிக்கையில் தற்காலிகமாக மருத்துவர்களைக் கூடுதலாக நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த தகுதியும், திறமையும் கொண்ட இளைஞர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
அவர்களுக்கு ஊதியம், பணி உத்தரவாதம் செய்வதற்கான வாக்குறுதிகளைத் தமிழ்நாடு அரசு அளித்தால் அவர்கள் கரோனா ஒழிப்புப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.
எனவே, புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, புதிய மருத்துவர்களை விரைந்து நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா நோயை ஒழிப்பதற்கான போரில் தமிழ்நாடு அரசு விரைவாக வெற்றிபெறும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.