உலகில் இன்று எந்தப் பகுதியில் திரும்பினாலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் கரோனா. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொருவரையும், தனிமைப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
பல்வேறு பணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக இருந்த மக்கள், ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர். இதனால் அதிகளவில் செல்போன் மற்றும் டிவியில் தங்கள் நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிகிறது. மேலும், பொது மக்கள் வெளியில் சென்று வந்தால் தங்களின் முகத்தைத் தொடக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. வாய், மூக்கு மட்டுமல்லாமல் கண்கள் மூலமும் கரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து கண் மருத்துவர் மாலதி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி.
ஊரடங்கு உத்தரவினால் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படின் பாதுகாக்க என்ன செய்யலாம்?
குழந்தைகள் வீட்டில் அதிக நேரம் டிவி மற்றும் மொபைல் போன் பார்ப்பதால் குழந்தைகளின் கண்களில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கண் பார்வைக்காகக் கண்ணாடி போட்டு உள்ளவர்களுக்கு பார்வை அதிகரிக்கும். சாதாரணமாக உள்ளவர்களுக்கும் பார்வை அதிகரிக்கக்கூடும். பார்வைக்கூடும்பொழுது, தூரத்தில் இருக்கும் பொருள்கள் தெரியாது.
கிட்டத்தில் உள்ள பொருள்கள் மட்டுமே தெரியும் என்பதையும், பிற்காலத்தில் கண்ணாடி போட வேண்டியதிருக்கும் என்பதையும் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் எடுத்துக்கூறலாம். இதனை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். மேலும் பெற்றோர்களும் வீட்டில் அதிக நேரம் டிவி பார்ப்பதையும், மொபைல் பார்ப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஊரடங்கு உத்தரவால் நாம் வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில், தூரத்திலுள்ள வானம் மரங்களை பார்க்கலாம். இதனால் கண்ணுக்கு அளிக்கப்படும் அழுத்தம் குறையும். அதிக நேரம் பார்ப்பதால் தலைவலி வருகிறது எனக் கூறுவார்கள். எனவே தொடர்ந்து டிவி, மொபைல் போன்றவற்றை பார்க்கக்கூடாது.
அதிக நேரம் ஒரு பொருளை அருகில் வைத்துப் பார்க்கும் பொழுது கண்ணுக்கு அழுத்தம் ஏற்படுவதுடன், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வரலாம். எனவே, கண்ணிற்கு அழுத்தம் இல்லாத வகையில் இடைவெளிவிட்டு பார்க்க வேண்டும். கண்ணிற்கு அழுத்தம் ஏற்பட்டால் பிற்காலத்தில் கண்ணில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பார்வையில் பிரச்சனை ஏற்படலாம்.
எனவே இடைவெளிவிட்டு படித்தல் ஒரு பொருளைப் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு கண்ணுக்கு அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிற்காலத்திலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமுடன் இருக்க முடியும்.
கண்ணின் மூலம் கரோனா தொற்று பரவுமா?
கரோனா வைரஸ் தொற்று கண் பாதிப்பினை ஏற்படுத்தும். "மெட்ராஸ் ஐ" வந்தால் நோயாளிகளுக்கு கண்ணீல் இருப்பது போன்ற அறிகுறிகள் இவர்களுக்கும் இருக்கும். கண் சிகப்பாக இருத்தல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் தெரியும். நம்ம ஊரில் தற்போது மெட்ராஸ் ஐ வரக்கூடிய காலமாக உள்ளது. மெட்ராஸ் ஐ போன்று கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடியது தான்.