இராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71,103 பயனாளிகளுக்கு ரூ.267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 30) வழங்கினார்.
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம்:ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், 13.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரக கட்டடம், தரை தளம் 5684 ச.மீ பரப்பளவிலும், முதல் தளம் 5500.50 ச.மீ பரப்பளவிலும், இரண்டாம் தளம் 6003 ச.மீ பரப்பளவிலும், மூன்றாம் தளம் 5325 ச.மீ பரப்பளவிலும், நான்காம் தளம் 5325 ச.மீ பரப்பளவிலும், ஐந்தாம் தளம் 623 ச.மீ பரப்பளவிலும், முகப்பு மண்டபம் 250.50 ச.மீ பரப்பளவிலும் என மொத்தம் 28,711 ச.மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை சார்பில் 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம், நீர்வளத்துறை சார்பில் 5.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரக்கோணம் வட்டம், அரிகில்பாடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தளமட்ட சுவர் (தடுப்பணை) என மொத்தம் 150 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிலான 24 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகள்:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 10.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னிகாபுரம்- பொன்னமங்கலம் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர் மட்டப் பாலம்.