கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிதிக்கு வழங்கப்படும் தொகை, கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக, அரசு மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை வழங்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலம் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்கவும் 50 கோடி ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகள், நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தச் சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை வாங்க இரண்டாம் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது கறுப்பு பூஞ்சை தொற்றுநோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதலமச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு