சென்னை மதுரவாயல் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் திமுக கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷின் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.
மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "1967ஆம் ஆண்டிற்கு முன்பு சீர்த்திருத்த திருமணம் அங்கீகாரம் பெறவில்லை. அண்ணா ஆட்சிக்கு வந்து சட்டப்பேரவையில் சீர்த்திருத்த திருமணத்திற்கு அங்கீகாரம் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
மொழி வாரியாக தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டிற்கு 'மெட்ராஸ்' என்று பெயர் இருந்தது. அண்ணா ஆட்சியில்தான் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றுத் தந்தார். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி எடப்பாடி ஆட்சி இல்லை. எடுபுடி ஆட்சி என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக நீட் தேர்வில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மத்திய அரசு ஐந்து, எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு கொண்டுவரலாம் என்ற முடிவுதான் எடுத்துள்ளது. அதற்கான சட்டங்களோ, உத்தரவோ வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஐந்து, எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்ற சூழ்நிலையை கொண்டு வந்துள்ளது.
அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா? இவை, தமிழ்நாட்டு மக்களை படிப்பறிவு இல்லாத பாமரனாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசு செயல்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் அதிமுக குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையைக் காட்டுவதுபோல மக்களுக்குப் பணம் என்ற கிலுகிலுப்பையைக் காட்டி வெற்றிபெற்றுள்ளனர். இதன் பின்னர் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறாது" என்று சூளுரைத்தார்.
மேலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றது என்று விமர்சித்த அதிமுக, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அல்வா கொடுத்து வெற்றிபெற்றதா என்று நக்கலாக கேள்வி எழுப்பினார்.