தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெரிசலில் சிக்காமல் செல்ல விரைவில் வருகிறது விமான டாக்ஸி

சென்னை: போக்குவரத்தில் சிக்காமல் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சென்னை ஐஐடியின் விமான தொழில் நுட்பப் பொறியியல் துறையினர் நினைத்த இடத்தில் தரையிறங்கும் வகையிலான விமான டாக்ஸியினை வடிவமைத்துள்ளனர்.

By

Published : Apr 23, 2021, 2:47 PM IST

Updated : Apr 23, 2021, 3:22 PM IST

chennai-iit-invent-a-new-plane-taxi
chennai-iit-invent-a-new-plane-taxi

சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வானத்தில் பறந்து செல்லும் வகையில் விமான டாக்சி ஒன்றை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. இந்த வாகன டாக்ஸியினை ஐந்து ஆண்டிற்குள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், வரும் ஜூலை மாதத்தில் ஐந்து கிலோ எடையுடைய பொருள்களை வான் வழியாக 100 கிலோ மீட்டர் தூரம் எடுத்துக்கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய வான்வழி போக்குவரத்து ஆணையரகத்தின் அனுமதியை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடியின் விமான தொழில் நுட்பப் பொறியியல் துறையின் பேராசிரியர் சத்ய நாராயண சக்கரவர்த்தி கூறும்போது, "சென்னை ஐஐடியின் விமான தொழில்நுட்பத் துறையின் சார்பில் மின்சார பேட்டரியில் இயங்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த அளவில் மின் உபயோகத்தின் மூலம் வான்வழியில் செல்லும் வகையில் விமான வடிவில் சிறிய அளவிலான டாக்ஸிகளைத் தயார் செய்துள்ளோம்.

மாதிரி விமான டாக்ஸி

முதலில் ஐந்து கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய ரக விமானத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இந்த விமானத்தின் மூலம் மனித உடல் உறுப்புகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பணத்தையும் அதிகளவில் விரயம் செய்யாமல் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். தொடர்ந்து 50 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விமானத்தின் மூலம் தடுப்பூசிகள், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை எளிதில் கொண்டுச் செல்ல முடியும்.

அதனைத் தொடர்ந்து மின்சார பேட்டரியில் இயங்கும் வகையில் விமான டாக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து அப்படியே மேலே எழும்பி வானில் பறந்து சென்று மேலிருந்து கீழே இறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை இயக்குவதற்கு ஒரு பைலட் அமர்த்தப்படுவார். அவருடன் ஒரு பயணி அமர்ந்துச் செல்லும் வகையில் டாக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான டாக்ஸி இறங்குவதற்கு விமான ஓடுதளம் எதுவும் தேவையில்லை. தெருக்கள், சாலைகள், வீடுகளின் மாடியிலும் இதனை தரையிறக்க முடியும்.

விமான டாக்ஸி தரையிரங்கும் மாதிரி

பூமியில் இருந்து 2 கிமீ தூரம் வரை, ஒரு மணி நேரத்தில் 200 கிமீ வேகத்தில் இதனை இயக்கலாம். ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டப் பின் 200 கிமீ தூரம் வரையில் செல்லும். மேலும், இந்த டாக்ஸி செல்லும்போது மரங்கள், கட்டடங்களில் மோதாமல் செல்லும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் தடுக்கப்படும். மேலும் விமான டாக்ஸியை ஏர் ஆம்புலன்ஸாக தயாரிக்க உள்ளோம். இதனால் நோயாளிகளை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்ல முடியும்.

விரைவில் வருகிறது விமான டாக்ஸி

விமான டாக்ஸியில் ஒருவர் வாகன நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இறங்க முடியும். அதாவது 10 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடைய முடியும். சாதாரண டாக்ஸி கார்களுக்கு செலவிடுவதை விட ஒன்றரை முதல் இரண்டு மடங்கு வரை செலவாகும். அதிக அளவில் இதுபோன்ற டாக்சிகளை உருவாக்கிவிட்டால் கட்டணத்தை குறைக்கலாம்" என்றார்.

Last Updated : Apr 23, 2021, 3:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details