சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வானத்தில் பறந்து செல்லும் வகையில் விமான டாக்சி ஒன்றை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. இந்த வாகன டாக்ஸியினை ஐந்து ஆண்டிற்குள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், வரும் ஜூலை மாதத்தில் ஐந்து கிலோ எடையுடைய பொருள்களை வான் வழியாக 100 கிலோ மீட்டர் தூரம் எடுத்துக்கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய வான்வழி போக்குவரத்து ஆணையரகத்தின் அனுமதியை பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடியின் விமான தொழில் நுட்பப் பொறியியல் துறையின் பேராசிரியர் சத்ய நாராயண சக்கரவர்த்தி கூறும்போது, "சென்னை ஐஐடியின் விமான தொழில்நுட்பத் துறையின் சார்பில் மின்சார பேட்டரியில் இயங்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த அளவில் மின் உபயோகத்தின் மூலம் வான்வழியில் செல்லும் வகையில் விமான வடிவில் சிறிய அளவிலான டாக்ஸிகளைத் தயார் செய்துள்ளோம்.
முதலில் ஐந்து கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய ரக விமானத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இந்த விமானத்தின் மூலம் மனித உடல் உறுப்புகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பணத்தையும் அதிகளவில் விரயம் செய்யாமல் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். தொடர்ந்து 50 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விமானத்தின் மூலம் தடுப்பூசிகள், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை எளிதில் கொண்டுச் செல்ல முடியும்.