தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2021, 7:58 PM IST

ETV Bharat / state

ரயில்வே பாதுகாப்பு படை அக்கறை காட்டுவதில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய அதன் ஊழியர்களோ, ரயில்வே பாதுகாப்பு படையோ அக்கறை காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையோ அக்கறை காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
ரயில்வே பாதுகாப்பு படையோ அக்கறை காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து பலியான கோவில்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன் மற்றும் ஆவடியை சேர்ந்த ஓட்டுனர் பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், இரு குடும்பத்தினருக்கும் தலா 8 லட்ச ரூபாயை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த உத்தரவுகளில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பதில்லை என்றும், கரப்பான்பூச்சி, எலி போன்றவற்றால் பயணிகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாவதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறினார். மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதோரும் பயணிப்பதாகவும், ஓடும் ரயில்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பெரும்பாலான ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை இறுதியில், ரயில்வே ஊழியர்கள், பயணிகள், மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் செல்பவர்கள் என பல தரப்பினரும், சுமைகளுடன் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். தண்டவாளங்களை கடப்பதற்கான முறையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் தண்டவாளத்தை கடக்கும் விபத்து ஏற்படுகிறது. இதனால், உயிர் பாதிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

மேலும், விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டிய அவர், இந்த குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய ரயில்வே ஊழியர்களும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அக்கறை செலுத்தவோ, பொறுப்பேற்பதோ இல்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குதிரையில் வந்து படுக தேச பார்ட்டி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details