சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், குமார் நடராஜன் (42). வழக்கறிஞரான இவர் குரோம்பேட்டை பாஜக மண்டலத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், தாம்பரம் சானிட்டோரியம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மருந்தகத்தில் அவருக்குத் தேவையான மருந்து ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த மருந்தை உபயோகப்படுத்தியபோது, அவருக்கு மயக்கம், தலைச்சுற்றல், அதிக சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அந்த மருந்தகத்திற்குச் சென்று, வேறு மருந்து மாற்றி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது மருந்தக உரிமையாளருக்கும் குமார் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஒரு கட்டத்தில் மருந்தக உரிமையாளர், குமார் நடராஜனை தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் குமார் நடராஜனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க:யார் இந்த அம்ரித் பால் சிங்? வாரீஸ் டி பஞ்சாப் என்றால் என்ன? முழுத் தகவல்கள் இங்கே!