சென்னை: திருவொற்றியூர் எஸ்.பி. கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரமோகன். இவருக்குத் திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக ரேணுகாதேவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த தேவேந்திரகுமார் (38) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் தேவேந்திரகுமார் புது வண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த செல்வி (31) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2021ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே செல்வி, தனது காதலன் தேவேந்திர குமாரிடம் 5 சவரனில் தாலி சரடு, ஒரு பைக், மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வேண்டும் எனக்கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திர குமார் மற்றும் அவரது பெற்றோர் செல்வியுடன் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வி, அடிக்கடி காதலன் தேவேந்திரகுமார் வீட்டிற்குச்சென்று தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
நேற்று (ஆக.31) மாலை வழக்கம் போல் செல்வி, காதலன் வீட்டிற்குச்சென்று தகராறில் ஈடுபட்டதால் அவரது தாய் ரேணுகாதேவி உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.