புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கரோனா பாதித்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், "புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.
பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் தலைமைச் செயலர், துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது.