சென்னை: இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியதில் ஒரு லட்சம் பேர் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. மொத்தமாக 6,000 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், பக்தவச்சலம், கஜேந்திரன், விவேக் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 27 கோடி ரூபாய் சொத்துக்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட நபர் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மின்மினி சரவணகுமார் இண்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.