சென்னை: தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலிகள் அடங்கிய பொதுப்பணித்துறை விலை விவர பட்டியலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் கட்டுமான சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலைத்துறை விரைந்து செயல்பட்டால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும், தரமான சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும், ஆனால் அங்கு நடைபெற்ற போராட்டம் ஜனநாயக போராட்டம் அல்ல எனவும் கூறினார்.