சென்னை: அம்பேத்கரின் படங்களும் சிலைகளும் நீதிமன்ற வளாகங்களில் ஏன் வைக்க கூடாது? என்ற விவாதம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது. ஏன் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாதா? நீதிமன்றத்தின் அறிவிப்பு சரியா? விரிவாக பார்க்கலாம்.
சட்டமேதை அம்பேத்கர்:மத்திய பிரதேசத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர் 1922ம் ஆண்டு சட்டம் பயின்று லண்டனில் பாரிஸ்டராக பதிவு செய்தார். 1947ல் இந்தியா சுதந்திரமடைந்ததும், நேருவின் அமைச்சரவையில் முதல் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் எங்கெல்லாம் மறுக்கப்பட்டதோ? அங்கெல்லாம் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
சட்டரீதியாக அந்த உரிமைகளை பெற முடியாது என்ற நிலை வந்த போது தனது சட்ட அமைச்சர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர், நூலாசிரியர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், கல்வியாளர், சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர், தத்துவவாதி என பன்முக தன்மை கொண்டவராக செயல்பட்டார்.
தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே நாயாகவும், பூனையாகவும் கேவலமாக நடத்தப்படும் போது இந்தியாவை தன்னுடைய தாய் நாடாக எங்கேயும் கூறமாட்டேன் என அறிவித்தார். போராட்டங்கள் மூலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை திடமாக நம்பிய அம்பேத்கர், அனைத்து மக்களுக்குமான சமமான பாதுகாப்பு சட்டரீதியாக மட்டுமே கிடைக்கும் என்பதை இந்திய அரசியலமைப்பின் மூலம் நிரூபித்தார்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி:குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இங்கிலாந்தில் சட்டம் பயின்று, தாயகம் திரும்பிய நிலையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் உரிமைக்காக தனது அகிம்சை வழி போராட்டத்தை துவங்கினார். ஆயுத போராட்டங்களால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என நம்பிய காந்தி, உண்ணாவிரத போராட்டங்களின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.
ஒத்துழையாமை இயக்கம், கதர் ஆடை போராட்டம், உப்பு சத்தியாகிரகம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை போன்றவற்றை அமைதி வழியில் வெற்றி கண்டார். காந்தி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர். அம்பேத்கரோ மறுக்கப்படும் உரிமைகளை கேட்டு பெற முடியாது. அதை சட்டரீதியாக மட்டுமே பெற முடியும் என்பதை நம்பினார். தேசத்தின் ஆகச்சிறந்த இரு தலைவர்களின் நோக்கமும் மக்களின் விடுதலை என்ற ஒன்றாகவே இருந்தது.
ஆனால், காந்தி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்களின் விடுதலைக்காகவும், அம்பேத்கரோ தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக சொந்த மக்களுக்கு எதிராக போராடினார். மக்களின் உரிமைக்காக போராடிய இரு தலைவர்களில் காந்தியின் படங்களை நீதிமன்றத்தில் வைக்கலாம் எனவும், அம்பேத்கரின் படங்களை வைக்க கூடாது எனவும் பதிவுத்துறை அறிவித்திருப்பது வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.