சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் SRM கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் இன்று (மே 26) மறைமலை நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து தனது வீட்டிற்குச் செல்வதற்காக முனிசிபாலிட்டி அலுவலகம் அருகே சாலையை கடந்துள்ளார்.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று பத்மாவதி மீது மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கிவீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பின்னர், பெண்ணிடன் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசாருதீன் 34 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் என தெரியவந்தது. தொடர்ந்து, அசாருதீன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அசாருதீன் இர்பானின் கார் ஓட்டுநர் என கூறப்படுகிறது.