கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு ரெம்டெசிவிர், ஆக்டெம்ரோ உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படுவதால், இந்த மருந்துகளுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவைப்படுவோர் அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு இம்மருந்துகள் கிடைக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக சிறப்பு கவுன்டர் செயல்படுகிறது. உரிய ஆவணங்களைக் காண்பித்து மருந்தினைப் பெற்றுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர் பரிந்துரைச் சீட்டு, கரோனா பரிசோதனைக்கான சான்று, சிடி ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நோயாளியின் ஆதார் அட்டையைக் காண்பித்தால் ஒரு நபருக்கு ஆறு குப்பிகள் அடங்கிய ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. ஒரு குப்பியின் விலை 1,545 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1,745 குப்பிகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்படி வரிசையில் காத்திருந்தவர்கள், மருந்தினை வாங்குவதற்கான கவுன்டர்களை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளைமுதல்(ஏப்.29) இரண்டு கவுன்டர்கள் இயங்கும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாகச் சிறப்பு கவுன்டர் செயல்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.