தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐஏஎஸ் அலுவலர்களை நியமனம் செய்து சமீபத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பார்வையாளராக மூத்த ஐஏஎஸ் அலுவலர் அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
இதனிடையே இன்று அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். மேலும் பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள இரண்டு இடங்களிலும், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் முகாமை ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல் முகாமிற்கு பெயர் நீக்க, பெயர் சேர்க்க வருகை தரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், போதிய தகுந்த இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க...'வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்'