கரோனா வைரசால் இதுவரை உலகளவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த கோவிட்-19 வைரசால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, தனது தந்தையுடன் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோவை வெளியிடுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் பாதுகாப்புடன் இருங்கள் என்பதை உணர்த்தும் விதமாக #Staysafe என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.